×

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்புக்கு அனுமதி: அரசாணை வெளியீடு

சென்னை: சட்டப் பேரவையில் உயர்கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்புகளை தொடங்குவதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதையடுத்து 10 கல்லூரிகளில் 10 பாடப்பிரிவுகளின் கீழ் ஆராய்ச்சி படிப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இது  குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழக சட்டப் பேரவையில், ஆகஸ்ட் 26ம் தேதி நடந்த உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் நலன் கருதி முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகளை நடத்த செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை நந்தனம் மற்றும் திருப்பூர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் புதியதாக ஆராய்ச்சி பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு இணங்க, மேற்கண்ட கல்லூரிகளில் ஏற்கெனவே முதுநிலை மற்றும் முதுஅறிவியல் பாடப்பிரிவுகள் அந்த கல்லூரிகளில் செயல்பட்டு வருகின்றன. எனவே, செங்கல்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல், சேலம் கல்லூரியில் தாவரவியல், கோவையில் தகவல் தொழில் நுட்பம், நாமக்கல் கல்லூரியில் விலங்கியல், திருச்சி பெரியார் கல்லூரியில் உயிர் வேதியியல், திண்டுக்கல் ஆங்கிலம், கும்பகோணம் இயற்பியல், கோவில்பட்டி தமிழ், சென்னை நந்தனம் ஆங்கிலம், திருப்பூர் சர்வதேச வணிகம் ஆகிய பாடங்களில் முழு நேரம் மற்றும் பகுதி நேரமாக ஆராய்ச்சி படிப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு உயர்கல்வி முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் அரசாணையில் தெரிவித்துள்ளார்.


Tags : Government , College of Arts and Sciences, Research, Admission, Government
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...