சென்னை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்திய தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா காரணமாக, பொதுமக்களின் நலன் கருதி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பண்டிகை நாட்களாக இருப்பதால் தினமும் கோயில்களை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பாஜ தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இதில், இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாரிமுனை பகுதியில் பொதுவாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பாஜ.வினரின் ஆர்ப்பாட்டத்தால் இந்த பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில் பாரிமுனையில் சட்டவிரோதமாக கூடுதல், நோய் தொற்று பரவும் என்று தெரிந்தே கவனக்குறைவாக செயல்படுதல், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தல், தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் பாஜ தலைவர் அண்ணாமலை, மாநில இளைஞரணி செயலாளர் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன், கு.க.செல்வம் உள்ளிட்ட 600 பேர் மீது சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பாஜகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.