சென்னை: இந்து அறநிலையத் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட 10 கல்லூரிகளில் 4 கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி அளித்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறையின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை உள்பட 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு, தொப்பம்பட்டி, விளாத்திக்குளம் ஆகிய நான்கு இடங்களில் கல்லூரிகள் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்கண்ட நான்கு இடங்களில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்து உரிய அரசாணை வழங்குமாறும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு நன்கு பரிசீலித்து மேற்கண்ட நான்கு இடங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கலாம் என முடிவு செய்து பிசிஏ, பிகாம், பிபிஏ மற்றும் பிஎஸ்சி கணினி அறிவியல் பாடங்களை 2021-22ம் கல்வி ஆண்டில் நடத்தலாம் என்றும் அனுமதிக்கப்படுகிறது.