டெல்லி: டெல்லியில் காவல்துறையினர் தங்களது குடும்பத்தினருடன் முக்கிய விழாக்களை கொண்டாடுவதற்கு விடுமுறை வழங்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லி காவல்துறை பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பிறந்தநாள், திருமண விழாக்கள் மற்றும் வாழ்க்கையின் பிற முக்கிய நிகழ்வுகளுடன் நேரம் செலவழிக்க அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானாவின் ஒப்புதலுடன் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த உத்தரவின் மூலம், சுமார் 80,000 காவல்துறையினர் இனிமேல் தங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாட, தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விடுமுறையினை பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பல சமயங்களில், காவல்துறை பணியாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் முக்கிய நிகழ்வுகளில் நேரத்தை செலவிட இயலாது என்பது கவனிக்கப்பட வேண்டியது. இந்த உத்தரவின்படி, காவல் துறையினருக்கு அவர்களின் பிறந்த நாள், திருமண நாள், வாழ்க்கைத் துணைவரின் பிறந்த நாள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் பிறந்தநாள் ஆகியவற்றுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்.
இதனையடுத்து, நடவடிக்கையை வரவேற்ற மற்றொரு மூத்த போலீஸ் அதிகாரி, “ஒவ்வொரு நபரும் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான நாட்களை கொண்டிருப்பார்கள். அவர்கள் அதனை தங்கள் குடும்பத்துடன் கொண்டாட விரும்புகிறார்கள், ஆனால் அவசரகால சூழ்நிலைகள் அல்லது வேலையின் தன்மை காரணமாக, காவல்துறையினர் இந்த வாய்ப்பினை தவறவிடுகிறார்கள். இனிமேல் இதுபோன்ற விழாக்களில் அரசு வழங்கும் விடுமுறையின் மூலமாக அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.