×

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நிஷிகோரி, டியாஃபோ வெற்றி

இண்டியன்வெல்ஸ்: பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரான்சிஸ் டியாஃபோ, கீ நிஷிகோரி உட்பட முன்னணி வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை கிளிஜெஸ்டர்ஸ், முதல் சுற்றில் தோல்வியடைந்தார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த முதல் சுற்றுப் போட்டியில் ஜப்பான் வீரர் கீ நிஷிகோரியும், போர்ச்சுகல் வீரர் ஜாவோ சவுசாவும் மோதினர். இதில் கடும் போராட்டத்திற்கு பின்னர் முதல் செட்டை டை பிரேக்கரில் 7-6 என ஜாவோ சவுசா கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்களையும் நிஷிகோரி 6-3, 6-2 என கைப்பற்றி, இப்போட்டியில் வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாஃபோ 6-4, 6-2 என நேர் செட்களில் பிரான்சின் பெனாய்ட் பைரை வீழ்த்தினார். அமெரிக்காவின் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் மார்கோஸ் ஜிரான், மேக்சைம் கிரெசி, டாமி பால் ஆகியோரும் முதல் சுற்றுப் போட்டியில் வென்று, 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை கிம் கிளிஜஸ்டர்சும், செக்.குடியரசின் கேடரினா சினியாகோவாவும் மோதினர். ஏற்கனவே 2 முறை பாரிபாஸ் ஓபனில் மகளிர் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ள கிளிஜஸ்டர்ஸ், நீண்ட நாள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க வந்துள்ளார். இப்போட்டியில் முதல் செட்டை கேடரினா சினியாகோவா 6-1 என எளிதாக கைப்பற்றினார். 2வது செட்டை 6-2 என கிளிஜஸ்டர்ஸ் கைப்பற்றினார். ஆனால் 3வது செட்டை 6-2 என கேடரினா கைப்பற்றி, கிளிஜஸ்டர்சை வீழ்த்தினார்.

Tags : BNP Baribas Open Tennis ,Nishigori ,Diafo , Open Tennis
× RELATED பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அசரென்கா, ஸ்விடோலினா 3வது சுற்றில் வெற்றி