×

தஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை கடத்தல்

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் அதேபகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் உறவினர்கள் யாரும் அவருடன் தொடர்பில் இல்லாத நிலையில் இவர்கள் இருவரும் தனியாக வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்து 4 நாட்கள் ஆன நிலையில் இன்று காலை அந்த பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. ஒரு பெண் குழந்தையை கடத்தி செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கணவன் மனைவி இருவரும் அந்த வார்டில் இருந்துள்ளனர். நேற்று இரவு பெண்கள் வார்டு என்பதால் ஆண்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் அவருடைய கணவர் வெளியில் சென்றுள்ளார். அந்த பெண் மட்டும் குழந்தையை வைத்துக்கொண்டு இரவு முழுவதும் இருந்துள்ளது. காலை அருகில் இருந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி, தான் குழந்தையை பார்த்துக்கொள்வதாகவும், நீ குளித்துவிட்டு வந்துவிடு என்று கூறவே இதனை நம்பி குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

குழந்தையை கட்டப்பையில் வைத்து கடத்தி சென்றுள்ளது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாகவே 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி பேச்சுகொடுத்துக்கொண்டு வந்துள்ளார். நீங்க எப்படி வந்தீங்க, துணைக்கு யாரும் இல்லையா என்று கேட்டு இந்த பெண்ணின் சூழ்நிலையை அறிந்துகொண்டு குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

அதிகாலை 7 மணியளவில் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. உடனடியாக ராஜலெட்சுமி குணசேகரனிடம் தெரிவித்ததின் அடிப்படையில் உடனடியாக மருத்துவமனை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தஞ்சை மேற்கு காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சியை வைத்து குழந்தையை கடத்தியது யார்? எங்கே சென்றார் என்பது குறித்தும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Tanjai Government Hospital , Girl child abduction
× RELATED தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து...