×

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வர எந்த தடையும் இல்லை!: கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரிட்டன் அரசு..!!

லண்டன்: கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வர எந்த தடையும் இல்லை என பிரிட்டன் அறிவித்துள்ளது. உலகில் பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் போதும் சில தடுப்பூசிகள் மட்டுமே சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டன் அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை தங்கள் நாட்டில் அனுமதிக்க மறுத்து வந்தது.

இந்தியாவில் இருந்து வருவோர் கோவிஷீல்டு தடுப்பூசியை 2 தவணைகள் செலுத்திய போதும் தங்கள் நாட்டுக்குள் வரும் போது 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவித்தது. இது இந்திய பயணிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவிஷீல்டு உள்பட தங்கள் நாட்டால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை முழுமையாக செலுத்திக்கொண்ட இந்தியர்கள் வரும் 11ம் தேதி முதல் பிரிட்டனில் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியாவிற்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லீஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசின் இந்த அறிவிப்பு இந்திய பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே உற்பத்தி அதிகரித்துள்ளதால் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல் ஈரானுக்கு 10 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை அனுப்பவும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Indians ,Shield ,British government , Govshield, Indians, Regulation, Government of the United Kingdom
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...