×

கடையை உடைத்து செல்போன் கொள்ளை: 4 வாலிபர்கள் கைது

ஆவடி:  அம்பத்தூர், சி.டி.எச் சாலை, கிருஷ்ணாபுரம் பகுதியில் பிரபல செல்போன் விற்பனை கடை உள்ளது. இந்த கடையின் மேலாளராக சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 3ம்தேதி இரவு சுரேஷ் வியாபாரம் முடிந்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். பின்னர், மறுநாள் காலை மீண்டும் கடையை திறக்க சுரேஷ் தலைமையில் ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும்,  அங்குள்ள ஷோகேஸில் வைத்திருந்த 16செல்போன்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து மேலாளர் சுரேஷ் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து போலீசார் கடைக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது இரு வாலிபர்கள் உள்பட கடையை உடைத்து கொள்ளையடித்து சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, அம்பத்தூர், ஐ.சி.எப் காலனி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த பிரவின்குமார் (18), மனோஜ்குமார் (19), குமார் (20), கொருக்குபேட்டை, எழில் நகரை சேர்ந்த அப்துப்ல்லா (20) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களில் மனோஜ்குமார் கொடுத்த தகவலின் பேரில் ஒரு செல்போன் மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாகி இருக்கும் முக்கிய குற்றவாளியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags : Shop, cell phone, robbery, teenagers, arrest
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...