மதுராந்தகம்: செங்கல்பட்டு 12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன், மதுராந்தகம் 12வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில்போட்டியிடும் சுமதி ஸ்ரீதர் ஆகியோரை ஆதரித்து சென்னை திருவிக நகர் தொகுதி திமுக எம்எல்ஏ தாயகம்கவி, ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட திமுக கட்சியினர் வீரணகுண்ணம் கிராமத்தில் நடந்தே சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். வீராணகுன்னம் ஊராட்சியில், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழு, முதியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரை நேரடியாக சந்தித்து, மாநில இளைஞரணி துணை செயலாளர், திரு.வி.க நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் ப. தாயகம்கவி இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசுகையில் ‘‘திமுக அரசு அமைந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த 100 நாள் சாதனைகள் மற்றும் அரிய பல திட்டங்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கூட்டுறவு வங்கிகளில் ஏழை விவசாயிகள் வைத்த நகை கடன் தள்ளுபடி, கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்க உத்தரவு ஆகியவை முக்கியமானவை. முதல் தவணையாக, ரூ.2000 மே மாதம் வழங்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று மேலும் ரூ.2000 வழங்கப்பட்டது. மொத்தம் 8393 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 16 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. ஆவின்பால் விலை லிட்டருக்கு ரூ.3 வரை குறைக்கப்பட்டுள்ளது. பெண்கள் நகர பேருந்துக்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்யவும் உத்தரவிட்டார். தற்போது திருநங்கைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் தடுப்பூசி மையத்தை மீண்டும் தொடங்க, பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.’’ என்று கூறினார்.இதனைத் தொடர்ந்து, பெரிய வெண்மணி கிராமத்தில் ராஜா ராமகிருஷ்ணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்தார். இதில், நிர்வாகிகள் சசிகுமார், ஆர். சங்கர், ஆர். செல்வநிதி ராமகிருஷ்ணன், வீரணகுன்னம் ஊராட்சி நிர்வாகிகள் மூர்த்தி, ராமு, பிச்சமுத்து, டில்லி, பாபு மனோகர், குருநாதன், கர்ணன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.