×

80 புதிய நிர்வாகிகள் நியமனம் மேனகா, வருண் காந்தி கட்சி பதவி பறிப்பு: பாஜ தலைவர் நட்டா அதிரடி

புதுடெல்லி: பாஜ.வின் செயற்குழுவுக்கு பிரதமர் மோடி, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உட்பட 80 நிரந்தர உறுப்பினர்கள், 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்தர அழைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாஜ தலைமையிலான ஒன்றிய அரசின் செயல்பாடுகள், கட்சியின் கொள்கைகள் இறுதி வடிவம் கொடுத்தல் போன்ற முக்கிய பணிகளை, இக்கட்சியின் செயற்குழுதான் முடிவு செய்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு முதல் இதன் கூட்டம் நடக்கவில்லை. இந்நிலையில், செயற்குழுவுக்கு 80 வழக்கமான  உறுப்பினர்கள், 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்தர அழைப்பாளர்களை, பாஜ தேசிய தலைவர் ஜேபி.நட்டா நேற்று நியமித்தார்.  

வழக்கமான 80 உறுப்பினர்களில், பிரதமர் மோடி, பாஜ மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ரவி சங்கர், பிரகாஷ் ஜவடகேர் ஆகியோரும் இக்குழுவில் தொடர்கின்றனர். லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பாஜ எம்பி வருண் காந்தி, இவருடைய தாயாரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான மேனகா காந்தி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்திர் சிங், சுப்பிரமணிய சுவாமி ஆகியோரின் செயற்குழு உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

Tags : Maneka ,Varun Gandhi ,BJP ,Natta Action , New executive, Maneka, Varun Gandhi, ousted, BJP leader
× RELATED 35 ஆண்டுகளுக்கு பின் மேனகா, வருண் காந்தி...