×

குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமித்துள்ள 21 ஏக்கர் நிலத்தை 4 வாரத்தில் மீட்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனியார் பொழுதுபோக்கு பூங்கா ஆக்கிரமித்துள்ள கோயில் நிலத்தை 4 வாரங்களில் மீட்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில், காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபால் சாமி கோயிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த, ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம் குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ரிசார்ட் நடத்தி வருகிறது. 1998ம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிந்த நிலையில், நிலத்தை இந்த நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து, 2 கோடியே 75 லட்சத்து 46 ஆயிரத்து 748 ரூபாயை இழப்பீடாக செலுத்தும்படி குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார், 2013ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை எதிர்த்து குயின்ஸ்லேண்ட்டை நிர்வகிக்கும் ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு 2013ம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. 1995ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நிலங்கள் முதலில் செல்வராஜ் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர், கோயில் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்ததால் இதைப் பயன்படுத்திக் கொண்டு, குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக கோயில் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. 1998ல் குத்தகை காலம் முடிந்த பிறகும் குயின்ஸ்லேண்ட் இந்த நிலத்தை ஆக்கிரமித்திருந்ததாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

 இதையடுத்து, அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்ட்டை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து, 4 வாரங்களில் கோயில் நிலத்தை அரசு மீட்க வேண்டும். நிலத்தை பயன்படுத்தியதற்காக அந்த நிறுவனம் வருவாய் துறைக்கு 1 கோடியே 8 லட்சம் ரூபாயையும், கோயிலுக்கு 9 கோடியே 50 லட்சம் ரூபாயையும் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Queensland ,Treasury , Queensland, Treasury, high court
× RELATED ராசிபுரம் அருகே ரூ.7 கோடி மதிப்பிலான...