×

ஊத்துக்கோட்டை அருகே பரிதாபம் மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தியில் தாய், தந்தை தற்கொலை

சென்னை:  ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (60),  விவசாயி.  இவரது மனைவி சரளா (55). இவர்களது மகள் அர்ச்சனா (28), ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அர்ச்சனா தினசரி வேலைக்கு பேருந்தில் சென்றபோது, அக்கரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கணபதி (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. கணபதி போலீஸாக பணியாற்றி சஸ்பெண்ட் செய்யபட்டவர். தற்போது, சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.  இவர்களின் காதல் பற்றி அறிந்த அர்ச்சனாவின் பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, அர்ச்சனாவை காணவில்லை என,  தாமரைச்செல்வன் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.   அர்ச்சனா,  கணபதியுடன்  காவல் நிலையம் வந்து, நாங்கள்   திருமணம் செய்து கொண்டோம் என கூறினார். அர்ச்சனாவை தங்களுடன் வருமாறு பெற்றோர்அழைத்தனர். ஆனால், அர்ச்சனா நான் கணபதியுடன் தான் குடும்பம் நடத்துவேன்  என கூறி விட்டு அவருடன் சென்று விட்டார்.  இதனால், சரளா நேற்று காலை வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த  தாமரைச்செல்வன் வீட்டில்  பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி  மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் தாமரைச்செல்வனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டர். மகள் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டதால், மன வேதனையடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : Uthukkottai , Uthukottai, romantic marriage, mother, father, suicide
× RELATED பெரியபாளையம் காவல் நிலையத்தில்...