×

துணைப் பட்டியலில் உள்ளடக்கிய போலி வாக்காளர்களை 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க தடைவிதிக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்

சென்னை: ‘‘துணைப் பட்டியிலில் உள்ளடக்கிய போலி வாக்காளர்கள் அனைவரையும் 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில்  வாக்களிக்க  தடைவிதிக்க வேண்டும்’’ என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு திமுக வலியுறுத்தியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  9ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 6ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ளடங்கிய திருப்பெரும்புதுர், குன்றத்தூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திலும் வெளியிட்டுள்ள வாக்காளர் துணைப் பட்டியிலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் தற்காலிகமாக கட்டிட பணியாற்ற வந்திருக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்  என்பது தெரிய வருகிறது.

மேலும் இந்த வாக்காளர்கள் அனைவரும் போலியானவர்கள் என்பது தெரிந்து விடும் என்பதால் இந்த  துணை வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களுடைய புகைப்படம் இணைக்காமல்  வெளியிடப்பட்டுள்ளது. 5000த்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை சேர்த்து துணைப் பட்டியல் வெளியிட்டுள்ளது.  முதல்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், வெளியிடப்பட்டுள்ள துணை வாக்காளர் பட்டியல் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு சட்டப்படி ஏற்புடையதல்ல. எனவே இத்தகைய போலி வாக்காளர்களுக்கு வாக்கு அளிக்க உரிமை  இல்லை என்றும், அவர்களுக்கு வாக்கு அளிக்க அனுமதிக்கக்கூடாது என்பது சட்டத்தின் நிலைப்பாடு.

இந்த துணைப் பட்டியிலில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் அதிமுகவினரால் வேண்டுமென்றே திட்டமிட்டு இணைக்கப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் ஆவார்கள். எனவே, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்து தேர்தல் விதிமுறைகள் 1995க்கு முரணாக  எந்தவித ஆதாரமும் இல்லாமல், புகைப்படமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த துணைப் பட்டியிலில் உள்ளடக்கிய போலி வாக்காளர்கள் அனைவரையும் வருகின்ற 9ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில்  வாக்களிக்க தடைவிதித்து, நியாயமான முறையில் தேர்தலை நடத்திட உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து அனைத்து மேல்நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,State Election Commission , Sub-list, Fake Voter, Local Election, State Election Commission,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி