×

தமிழக காவல்துறைக்கு சவால் விட்டு பேசும் சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: .தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை.: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.  இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தமிழ்நாடு காவல்துறைக்கு சவால் விட்டு தொடர்ந்து பேசி வருகிறார்.  

அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.  புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கும், சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையில் செயல்படும் சீமான் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

அவரது வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தீவிரவாத பாதைக்குச் செல்ல நேரிடும். இந்த போக்கு தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவரது பேச்சுகள், நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, சட்ட விரோதமாகச் செயல்படும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, தமிழகத்தின் அமைதிக்கு பெரும் துணையாக இருக்கும்.

சீமான் குறித்து டிஜிபியிடம் புகார்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி குறித்து  அவதூறாக பேசிய, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை  எடுக்க கோரி காங்கிரஸ் செயல் தலைவரும், எம்பியுமான ஜெயக்குமார் தலைமையில்  காங்கிரஸ் நிர்வாகிகள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, மகிளா காங்கிரஸ்  தலைவி வக்கீல் சுதா உள்ளிட்டோர் தமிழக டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார்  செய்தனர். தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து புகார்  மனுவை அளித்தனர். பின்னர் ஜெயக்குமார் எம்பி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சீமான் செய்வது நடைமுறை நாகரீக அரசியலிலே  ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. காவல்துறை உரிய  நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம்’’ என்றார்.

Tags : Seeman ,Tamil Nadu police ,KS Alagiri , Tamil Nadu Police, Seeman, Gangster Act, Arrest, KS Alagiri
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...