சென்னை: தென்மேற்கு பருவமழை தாக்கத்தால் பெய்த மழை காரணமாக நீர்வளத்துறை கட்டுபாட்டில் உள்ள 90 அணைகளில் 6 டிஎம்சி நீர் இருப்பு அதிகரித்துள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் நீர்வளத்துறை கட்டுபாட்டில் 90 அணைகள் உள்ளது. இந்த அணைகள் தான் மாநிலத்தின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்க முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இதில், முக்கிய அணைகள் மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளது. எனவே, தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக பெய்து வரும் மழை காரணமாக, முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 38 டிஎம்சி ஆகவும், 32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 30 டிஎம்சி ஆகவும், 4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் 3.4 டிஎம்சி ஆகவும், 10 டிஎம்சி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில் 4.3 டிஎம்சி ஆகவும், 5.5 டிஎம்சி கொள்ளளவு பாபநாசம் அணையில் 2.4 டிஎம்சி ஆகவும், 13 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிகுளம் அணையில் 13 டிஎம்சி ஆகவும், 1.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையில் 1.5 டிஎம்சி ஆகவும், 4.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 2.2 டிஎம்சி ஆகவும், 4.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 3.7 டிஎம்சியாகவும், 5 டிஎம்சி
கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையில் 5 டிஎம்சி ஆகவும், 3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் 3 டிஎம்சி ஆகவும், 1.7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் 0.93 டிஎம்சி என மொத்தம் 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 90 அணைகளில் 132 டிஎம்சி நீர் இருப்பாக உள்ளது. கடந்த 3ம் தேதி 126 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. 4 நாட்களில் பெய்த மழை காரணமாக அணைகளில் 6 டிஎம்சி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வந்து கொடுக்கிறது. இதனால், அணைகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இந்த அணைகளுக்கு வரும் நீர்வரத்துக்கேற்ப உபரி நீர் வெளியேற்றப்படுகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.