×

திருப்புல்லாணி அரசு பள்ளி வளாகத்தில் சீன பானை ஓடுகள் கண்டெடுப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி சுரேஷ்-சுதா - அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கி.பி.12-13ம் நூற்றாண்டை சேர்ந்த சீன பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்தனர். தமிழக வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொண்டு பாதுகாக்க திருப்புல்லாணி சுரேஷ்-சுதா- அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 2010ம் ஆண்டு முதல் தொன்மை பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் மூலம் பழமையான நாணயங்கள், பானை ஓடுகள், வரலாற்று சின்னங்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளை படிக்கவும், படியெடுக்கவும் மாணவர்கள் அறிந்துள்ளனர். இந்நிலையில் பள்ளியில் குடிநீர் தொட்டி கட்ட பள்ளம் தோண்டிய இடத்தில் கிடந்த சீன பானை, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், மான் கொம்புகளின் உடைந்த பகுதிகள் ஆகியவற்றை பத்தாம் வகுப்பு மாணவர்கள் மனோஜ், பிரவினா, டோனிகா, பாத்திமா ஷிபா ஆகியோர் கண்டெடுத்து தொல்லியல் ஆய்வாளர் ராஜகுருவிடம் கொடுத்தனர்.

இது குறித்த ஆய்வுக்கு பின் ராஜகுரு கூறியதாவது: செலடன், போர்சலைன் ஆகிய இரு வகை சீன நாட்டு பானை ஓடுகள் இங்கு கிடைத்துள்ளன. இதில் போர்சலின் ஓடுகளில் வெள்ளையில் சிவப்பு, கரும்பச்சை நிறத்தில் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. பாசி நிற களிமண்ணில் செய்யப்படும் செலடன் வகை மட்பாண்டங்களில் இளம்பச்சை நிறத்தில் ஒரு ஓடு கிடைத்துள்ளது.

கருப்பு, சிவப்பு பானை ஓடுகளில் கை விரல் நகத்தால் உருவாக்கிய அழகிய வடிவங்கள் அதன் வாய்ப்பகுதியில் உள்ளன. இங்கு கிடைத்த உள்துளையுடன் உள்ள மானின் உடைந்த கொம்புகள் கிளையுள்ள உழை மானின் கொம்புகள் ஆகும். இவை வரலாற்றின் இடைக்காலமான கி.பி.12-13ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கும், பள்ளிக்கும் இடையில் உள்ள மேட்டு பகுதியில் இரும்பு உருக்காலை இருந்த தடயத்தை 2014ல் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்தனர். கோயில் மேற்கு சுவர், பள்ளி வளாகம், பொன்னங்கழிக் கானல் ஓடை ஆகியவற்றிற்கு இடையில் 20 ஏக்கர் பரப்பு பகுதியில் பானை ஓடுகள் காணப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிராமங்களான எஸ்.பி.பட்டினம் முதல் பெரியபட்டினம் வரை சீன மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சீன வணிகர்களின் வருகைக்கு சான்றாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Breakthrough Government School , Chinese pot tiles
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்