திருவனந்தபுரம்: சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதி விழா அடுத்த மாதம் 16ல் தொடங்க உள்ள நிலையில் கேரள முதல்வர் அறிவித்துள்ளார். தேவைக்கேற்ப கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோயில் விழா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புக்காக ஏற்கனவே இருந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும். பக்தர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று கேரள அரசு நிபந்தனை விதித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்.
கடந்த வருடத்தை போலவே இந்த ஆண்டும் எரிமேலி வழியாக செல்ல அனுமதி இல்லை. சபரிமலை செல்லும் பக்தர்கள் வாகனம் நிலக்கல் வரை செல்லவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலக்கல்லில் இருந்து கேரள அரசு பேருந்துகள் மூலம் பம்பைக்கு செல்லலாம். பம்பையில் நீராடவும் பக்தர்களுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.