சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் வரும் 16ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்ல இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பிற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தேர்தலுக்கு முன்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்தார். ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததால் அவர் பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து பேசி வந்தார்.
கடந்த 2 மாதங்களாக தொலைபேசி கலந்துரையாடலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வரும் 16ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வழிநடத்தும் பொறுப்பு தனக்கு இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். இதனால் வரும் 16ம் தேதிக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை சசிகலா தீவிரப்படுத்தலாம் என்று அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது. சசிகலாவின் அறிவிப்பு எடப்பாடி தரப்பை கலக்கத்தில் ஆழ்த்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.