×

அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகள் தனியார் கல்லூரிகளுடன் போட்டிபோடும் வகையில் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சென்னை புரசைவாக்கம் கங்காதேஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதேஸ்வரர் கோயிலில் ரூ.3 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.15 லட்சம் செலவில் திருத்தேர் மேம்படுத்தப்படும். நல்ல வடிவமைப்பில் மரத்தேர் செய்வதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் பணிகள் தொடங்கும். இக்கோயிலில் சிதிலமடைந்த வாகனங்கள் புதுப்பிக்கப்படும்.

கோயில் குளத்திற்கு ரூ.24 கோடி செலவிடப்பட்டதாக  வெளியான செய்தி தவறானது. இந்த குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கவில்லை. இக்கோயிலின் குளம் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும். கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்படும். நிலுவையில் உள்ள வாடகை தொகை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள சில கோயில்களின் பெயர்கள் சமஸ்கிருத பெயரில் உள்ளது. சில கோயில்களுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருத பெயர்கள் உள்ளன. இது குறித்து தீர ஆய்வு செய்து, முதல்வர் அனுமதியுடன் இரண்டு பெயர்களிலும் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் இயங்கி வருகிறது. புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளோம். இதில் 4 கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறையிடம் அனுமதி பெற்றுள்ளோம். இந்த கல்லூரிகளை இந்த ஆண்டு  திறக்கவுள்ளோம். தனியார் கட்டிடத்தில் வாடகையில் கல்லூரியை நடத்தவுள்ளோம். சென்னையில் 2 இடங்களில் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ளோம்.
சென்னை கொளத்தூரில் கல்லூரி தொடங்க பூம்புகார் நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகளில் ஆன்மீக சார்ந்த பாடமும் நடத்தப்படும். சென்னையில் இருக்கின்ற தனியார் கல்லூரிக்கு போட்டிபோடும் விதத்தில் இந்த கல்லூரிகள் நடத்தப்படும்.

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படியே கோயில்கள் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று  முழுமையாக குறைந்த பிறகு, வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில் திறப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

புரோக்கர்கள் மூலம் பணம் வசூலிக்கும் முறையை ஒழித்து முறைப்படுத்தப்படும். கோயில்களுக்கு பக்தர்கள் நன்கொடை அளிக்க இணையதளம் தொடங்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய் கிழமை பக்தர்கள் அதிகளவில் வருவதால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோனை செய்து செவ்வாய் கிழமை கோயில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Treasury ,Minister ,Sekarbabu , sekarbabu
× RELATED ராசிபுரம் அருகே ரூ.7 கோடி மதிப்பிலான...