×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் களைகட்டிய பட்டாசு விற்பனை

சிவகாசி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் நவ.4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து, சாத்தூர், சிவகாசி, விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் உட்பட விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் 1500க்கும் மேற்பட்ட பட்டாசு மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த பட்டாசு கடைகள் மூலம் இரவு பகல் வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு பட்டாசு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசியில் பட்டாசு விலை குறைவாக இருக்கும் என்பதால் வெளி மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் நேரடியாக வந்து பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 20 முதல் 35% தள்ளுபடியில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது. பட்டாசு விற்பனையில் சிவகாசி படு பிசியாக உள்ளது.

சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகையில்,‘‘வெளி மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் பட்டாசு அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. சிவகாசி பட்டாசு கடைகளில் உள்ளூர் விற்பனை ஆயுத பூஜை முதல் சூடுபிடிக்கும். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு 70 சதவிகித பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இந்தாண்டும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது’’என்றனர்.

பட்டாசு விற்பனையாளகள் கூறுகையில்,‘‘கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக துர்கா பூஜை, தசரா போன்ற பண்டிகைகளுக்கான பட்டாசு விற்பனை இல்லை. வட மாநிலங்களில் இருந்தும் பட்டாசு ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவு இல்லை. மேலும், பட்டாசு தயாரிப்பதற்கும் வெடிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொறு ஆண்டும் பட்டாசு தொழில் பல்வேறு சோதனைகளை தாண்டிதான் வந்து கொண்டிருக்கிறது’’என்றனர்.

பட்டாசுகள் பலவிதம்

300க்கும் மேற்பட்ட வகை பட்டாசு மற்றும் மத்தாப்பு, வாணவேடிக்கை வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பச்சை, மஞ்சள், சிவப்பு, தம்தமாக்கா என 40 வகை மத்தாப்புகள் உள்ளன. சங்கு சக்கரங்கள் 35 வகைகளில் உள்ளன. 10 சாட் வெடி முதல் 500 சாட் வெடிவரை பல்வேறு ரகங்களில் இருக்கின்றன. வாட்டர் குயின்; பூச்செட்டி வகையிலான இந்த புதுவகையான பட்டாசுகள் வெடிக்கும் போது கையில் பட்டாலும் சுடாது. சிறுவர்களை கவரும் வகையில் ஹெலிகாப்டர் இயங்குவது அமைக்கப்பட்டுள்ளது. பற்ற வைத்தவுடன் 15 அடி உயரத்திற்கு ஹெலிகாப்டர் போல் சென்று வெடிக்கும். காக்டெய்ல்: பற்ற வைத்தவுடனே சட சட வென 1000 வாலா வெடியைப் போல வெடித்து 15 உயரம் வரை செல்லும். புஷ்வானம் போலவும் தோன்றும். மேஜிஷோ வகை பட்டாசுகள் 200 அடி உயரம் மேலே சென்று இருகலரில் பிரிந்து மத்தாப்பு போல சிதறும். சிங்கிள் ஷாட் பட்டாசுகள்: 150, 200 அடிவரை மேலே சென்று பல வண்ணங்களில் கலர் கலராய் வெடிக்கும். டூ எல்கோர், டாடாகிரி; ஸ்கை சாட் வகை பட்டாசுகள் 200 அடி உயரம் வரை சென்று கலகலராய் வெடித்து சிதறும்.

Tags : Sivakasi ,Deepavali festival , Deepavali festival
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...