×

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்!: வலைகளை கிழித்தெறிந்து இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து 20க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல்களும், கெடுபிடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அச்சமயம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை கற்களை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகாரளித்துள்ளனர். இதனால் ஒரு படகிற்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, கைதான தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தாலும், மறுபுறம் தமிழக மீனவர்களை அடுத்தடுத்து சிறை பிடிக்கவும்  தவறுவதில்லை. கச்சத்தீவை மீட்பதே இப்பிரச்னைக்கு  நிரந்தர தீர்வு என ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Rameswaram ,Kachattiwa ,Sri Lanka Navy , Kachchativu, Rameswaram Fishermen, Sri Lanka Navy
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...