×

கூடங்குளம் அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் : பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம்!!

சென்னை : கூடங்குளத்தில் அணுக்கழிவு அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கூடங்குளத்தில் 3 மற்றும் 4 அணு உலைகள் செயல்பட தொடங்கியதும் அவற்றில் இருந்து உண்டாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திற்குள் சேமித்து வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கு இந்திய அணுசக்தி வாரியம் அனுமதி வழங்கி இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்த அனுமதியானது அனைவருக்கும் கடும் வேதனை அளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவு மீறுவதாக இருப்பதாகவும் டி.ஆர். பாலு குறிப்பிட்டுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கும் போது, அங்கு சேமிக்கப்படும் அணுக்கழிவுகள் ரஷியாவிற்கு அனுப்பப்படும் என்ற ஒப்பந்தத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 1,2,3,4 ஆகிய அணு உலைகளில் சேமிக்கப்படும் கழிவுகளை ரஷியாவுக்கே அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி உள்ளார்.அணுசக்தி கழகத்தின் உத்தரவை திரும்பப்பெறுவதுடன் கல்பாக்கத்தில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். சென்னை, புதுச்சேரி மற்றும் தென் தமிழ்நாட்டில் அதிகளவில் மக்கள் வசிப்பதால் அணுக்கழிவுகளை முன்னுரிமை அளித்து அகற்றுவதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலு அறிவுறுத்தி உள்ளார்.

Tags : Kudankulam ,Russia ,DMK ,PM Modi ,DR ,Balu , கூடங்குளம் ,அணுக்கழிவு, ரஷ்யா,பிரதமர் மோடி,டி.ஆர்.பாலு
× RELATED கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு