×

1ம் தேதி தந்தை இறந்த நிலையில் கொரோனாவுக்கு தாயும் உயிரிழந்த பரிதாபம்: மருத்துவர்கள் அலட்சியம்; மகன் பரபரப்பு வீடியோ

சிதம்பரம்:    கடலூர் மாவட்டம், சிதம்பரம் வீரராகவன் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன். இவரது மனைவி செந்தாமரைச்செல்வி (54). இவர்கள் இருவரும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 24ம் தேதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 1ம் தேதி கோதண்டராமன் உயிரிழந்தார். செந்தாமரைசெல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை அவரும் உயிரிழந்தார்.

 அவரது மகன் சீனிவாசன், மருத்துவர்கள் பணியில் இல்லாததால் தனது தாய் இருந்ததாக கூறி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் இந்த வார்டில் 20 நிமிடமாக மருத்துவர்கள் இல்லை. எனது தாயாருக்கு பொருத்தப்பட்டிருந்த இயந்திரம் நீண்ட நேரமாக இயங்கவில்லை. பழுதடைந்த அந்த இயந்திரத்துக்கு பதிலாக மாற்று இயந்திரம் கொடுத்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.  

உரிய விசாரணை:   இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் லாவண்யா குமாரி கூறுகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செந்தாமரைச்செல்வியின் நுரையீரல் 95% பாதிக்கப்பட்டிருந்ததால்தான், உயிரிழந்துள்ளார். அவருக்கு பொருத்தப்பட்டிருந்த எலக்ட்ரோகார்டியோகிராம் சீராகத்தான் இயங்கியது. இருப்பினும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

Tags : Corona , Father, Corona, doctors, indifference
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...