சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட ஜமீன் தேவர்குளம் ஊராட்சியைச் சார்ந்த வெற்றிமாறனுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடுகிற அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் தான் போட்டியிடுவதை சிலர் திட்டமிட்டே தடுத்து விட்டனர் என்று அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளாமல் அதுகுறித்து உண்மை நிலை அறிய தமிழ்நாடு அரசு சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். அதற்கான விசாரணையின் முடிவு வரும் வரை இந்த ஊராட்சிக்கான தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். இதற்கென தனியே ஒரு விசாரணைக் குழுவை அமைத்து எங்கெல்லாம் இப்படியான புகார்கள் எழுந்துள்ளனவோ அவற்றை ஆராய்ந்து உண்மையான அதிகாரப் பரவலுக்கு தமிழக அரசு வழிவகுக்க வேண்டும்.