அய்சால்: மிசோரம் மாநிலத்தில் ஒரு கணவன் பிரிந்து சென்ற தனது 61 வயது மனைவியை மனித வெடிகுண்டாக மாறி கொன்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மிசோரம் மாநிலம், லுங்க்லேய் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோமிங்கிலினா (62). இவருடைய மனைவி பை லாங்தியாங்லிமி (61). தனது முதல் கணவரை பிரிந்த இவர், ரோமிங்கிலினாவை 2வது திருமணம் செய்தார். இவருக்கு முதல் கணவரின் மூலமாக பிறந்த மகள் (40) இருக்கிறார். தங்களுக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக, கணவனும், மனைவியும் கடந்தாண்டு பிரிந்தனர்.
சன்மாரி வெங் என்ற பகுதியில் தனது மகளுடன் சேர்ந்து யாங்லிமி காய்கறி கடை நடத்தி வந்தார். தன்னை பிரிந்து சென்ற மனைவியை கொல்ல நினைத்த ரோமிங்கிலினா, நேற்று முன்தினம் நள்ளிரவு அவருடைய கடைக்கு சென்றார். காய்ச்சல் அடிப்பதாக யாங்லிமியிடம் கூறிய அவர், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீடி ஒன்றை சுருட்டித் தரும்படி கேட்டார். யாங்லிமியும் பரிதாபப்பட்டு, பீடி சுற்றி கொடுத்தார். பீடியை பற்ற வைத்த ரோமிங்கிலினா, தலை சுற்றுவதாக கூறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக யாங்லிமியை கட்டிப்பிடித்து உருண்டார். திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இது பற்றி போலீசார் கூறுகையில், ‘ரோமிலிங்கிலினா, தனது உடம்பில் ஜெல்லட்டின் வெடிபொருள் குச்சிகளை கட்டி சென்றுள்ளார். மனைவியை கட்டிப் பிடித்ததும் பீடி நெருப்பின் மூலம் அவற்றை வெடிக்க செய்துள்ளார். இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,’ என்றனர். மனைவியை மனித வெடிகுண்டாக மாறி கணவன் கொன்றிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.