இண்டியானா வெல்ஸ்: பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகள் வழக்கத்திற்கு மாறாக இரட்டையர் பிரிவிலும் களம் காணுகின்றனர். அமெரிக்காவின் இண்டியானா வெல்ஸ் நகரில் பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. தகுதிச் சுற்று ஆட்டங்கள் முடிந்ததையடுத்து முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகளான கரோலினா பிளிஸ்கோவா, பார்போரா கிரெஜ்சிகோவா, பெட்ரா கிவிதோவா(செக் குடியரசு), பியான்கா ஆண்ட்ரீஸ்கு, லெய்லா பெர்ணான்டஸ்(கனடா), ஆன்ஸ் ஜெபர்(துனிசியா), கோரி காப், டேனியலி கொலின்ஸ்(அமெரிக்கா), மரியா சக்காரி(கிரீஸ்), கெர்பினி முகுருசா, பவுளா படோசா(ஸ்பெயின்), விக்டோரியா அசரென்கா(பெலாரஸ்), எம்மா ரெடுகானு(பிரிட்டன்), சிமோனா ஹாலேப்(ருமேனியா), பெலிண்டா பென்சிக்(சுவிட்சர்லாந்து), ஜெலனா ஆஸ்டபெங்கோ(லாத்வியா), இகா ஸ்வியடெக்(போலாந்து) என ஆகியோர் நேரடியாக 2வது சுற்றில் விளையாட உள்ளனர்.
இவர்களில் பலர் வழக்கத்திற்கு மாறாக இரட்டையர் பிரிவிலும் இந்த முறை களம் காண உள்ளனர். சிமோனா ஹலேப், இகா ஸ்வியடெக், ஜெலனா ஆஸ்டபெங்கோ, ஜில் தெய்க்மன்(சுவிட்சர்லாந்து) உட்பட பல முன்னணி வீராங்கனைகள் இரட்டையர் பிரிவில் களம் காணுகின்றனர். யுஸ் ஓபன் உட்பட சமீபத்திய டென்னிஸ் தொடர்களில் 20 வயதை கூட எட்டாத இளம் வீராங்கனைகள் பட்டங்களை வென்று அசத்தி வருகின்றனர். அதனால் முன்னணி வீராங்கனைகள் பாதுகாப்பாக இரட்டையர் பிரிவையும் குறிவைத்துள்ளனர். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லா விட்டாலும், இரட்டையர் பிரிவிலாவது பட்டம் வெல்லலாம் என்பது அவர்களது இலக்கு. அவர்களுடன் இந்திய வீராங்கனை சனியா மிர்சா, சீன வீராங்கனை ஹூய் சாய் உடன் இணைந்து இரட்டையர் பிரிவில் களம் காண உள்ளார்.
* ஆடவர் பிரிவிலும்...
மகளிர் ஒற்றையர் பிரிவை போன்று ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் முன்னணி வீரர்கள் டானில் மெத்வதேவ், ஆந்த்ரே ரூபலேவ்(ரஷ்யா), டெனிஸ் ஷபாலாவ்(கனடா), ராபர்டோ பாடிஸ்டா(ஸ்பெயின்), டீகோ ஸ்வார்ட்ஸ்மேன்(அர்ஜென்டீனா), மேட்டீயோ பெர்ரெட்டீனி(இத்தாலி), ஜானிக் சின்னர்(அமெரிக்கா), அலெக்சாண்டர் ஸ்வெரவ்(ஜெர்மனி), ஸ்டெபினோ சிட்சிபாஸ்(கிரீஸ்) ஆகியோரும் நேரடியாக 2வது சுற்றில் களம் காண உள்ளனர்.
* பாகிஸ்தான் பயணம் ரத்து
பாகிஸ்தான் சென்ற நியூசிலாந்து ஆடவர் அணி தொடரை ரத்து செய்து ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் நாடு திரும்பியது. அதே பாதுகாப்பு காரணங்களை சொல்லி இங்கிலாந்து ஆடவர் அணியும் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தது. இந்நிலையில் பாகிஸ்தான் செல்ல இருந்த இலங்கை மகளிர் அணியும் பயணத்தை திடீரென காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது. இலங்கை மகளிர் அணி இம்மாதம் பாகிஸ்தான் சென்று 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது.