×

மோசடி நபருடன் தொடர்பு வைத்துள்ள கேரள போலீசை எப்படி நம்ப முடியும்: உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சேர்த்தலாவை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். கொச்சி கலூரில் பழங்கால அரிய வகை புராதான பொருட்கள் விற்பனை செய்யும் அருங்காட்சியகம் நடத்தினார். தன்னிடம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திப்புசுல்தான் அரியணை, வாள், இயேசுவை காட்டிக்கொடுப்பதற்காக கொடுத்த 2 வெள்ளிக்காசுகள், இயேசுவின் ரத்தக்கறை படிந்த உடையில் இருந்த நூல் பயன்படுத்தி செய்த ஜெபமாலை, குரான் உள்பட மிக அரிய பொருட்கள் இருப்பதாக கூறி வந்தார்.

இவரது அருங்காட்சியகத்துக்கு டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம்இ டிஐஜி  உள்பட ஏராளமான போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து மோன்சனுடனும், அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களுடனும் புகைப்படம் எடுத்தனர். தன்னை டாக்டர் என்று மோன்சன் கூறியதால் அவரிடம் காங்கிரஸ் தலைவர் சுதாகரன் சிகிச்சைக்கு சென்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில் மோன்சன் மீது மோசடி புகார் கூறப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மோன்சனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்ததால், போலீசாரிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறி, அவரது முன்னாள் டிரைவர் அஜித் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள போலீசுக்கு எதிராக நீதிபதி கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்தார்.

நீதிபதி கூறியதாவது: அருங்காட்சியகம் வைத்துள்ள மோன்சனுக்கு எதிராக தற்போது பெருமளவு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. அவருடன் பல உயர் போலீஸ் அதிகாரிகளும் நல்ல தொடர்பில் இருந்து உள்ளனர். அவரது வீட்டிற்கு சென்றபோது யானை தந்தங்களை போலீசார் பார்த்து உள்ளனர். ஆனால் அது உண்மைதானா? தந்தங்கள் எப்படி கிடைத்தது? என்று போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தாதது கண்டனத்துக்குரியது.

மோன்சனுக்கும், அவரது வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு மோசடி ஆசாமிக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பது அந்த நபர் மீது மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். இதன்மூலம் அவரிடம் மக்கள் ஏமாந்துள்ளனர். எனவே மோன்சன் குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மோன்சனுடன் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள ஆசாமியுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள போலீசாரை எப்படி நம்ப முடியும். அப்படி இருக்கும்போது கேரள போலீசார் விசாரணை நடத்தினால் உண்மையான தகவல் வெளிவருமா என்பது சந்தேகம் தான். இவ்வாறு நீதிபதி கூறினார்.

Tags : Kerala ,Supreme Court , High Court, Judge
× RELATED முல்லைப் பெரியாறு: கேரள அரசு கட்டும்...