தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் பக்தர்கள் இன்றி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரபட்டினத்தில் பிரம்மாண்டமாக கொண்டப்படும். இத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். பூஜை, சூரசம்ஹாரம் நிகழ்வில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஒன்றுகூடுவார்கள். மற்ற மாவட்டங்கள், மாநிலங்கள் தாண்டி வெளிநாடுகளில் இருந்தும் தசரா திருவிழாவை கண்டுகளிக்க பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவின் சிறப்பாக பக்தர்கள் வேடம் அணிந்து காணிக்கை பெற்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். காவல்துறையினரும் பலத்த பாதுகாப்பு வளையத்தில் குலசேகரப்பட்டினத்தை கொண்டுவருவார்கள்.
கடற்கரையில் நள்ளிரவில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்வை காண்பதற்கு மிகப்பெரிய கூட்டம் கூடும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக 2வது ஆண்டாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, குலசேகரபட்டினத்தில் பக்தர்கள் இன்றி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேடம் அணிந்தவர்கள் அந்தந்த பகுதிகளில் விரதத்தை முடிக்க வேண்டும் எனவும் கடற்கரைக்கு செல்ல கூடாது எனவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது.
அக்டோபர் 7 மற்றும் 11 முதல் 14ம் தேதி வரை மட்டுமே கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்பதால், கடந்த 2 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். கடலில் நீராடி, செவ்வாடை தரித்து அம்மன் சன்னதியில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.