சென்னை: தமிழகத்தில் கலப்படம் செய்து ஜவ்வரிசி விற்கப்படுகிறதா என உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜவ்வரிசி உற்பத்தியில் வேதிப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கக் கோரி நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில், வேதிப் பொருட்களை கலந்து சிலர் கலப்பட ஜவ்வரிசியை தயாரித்து விற்பனை செய்வதால், இயற்கையாக ஜவ்வரிசி உற்பத்தி செய்பவர்கள பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜவ்வரிசி மாதிரிகளை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி 9 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கடைகளில் விற்பனை செய்யப்படும் 3 வகையான சவ்வரிசி பாக்கெட்டுகளை, உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் வழங்கி, இந்த மாதிரிகளில் கலப்படம் உள்ளதா? என ஆய்வு செய்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.