சித்தூர் : சித்தூர் அருகே காரில் கடத்தி செல்ல முயன்ற 1,536 கர்நாடக மாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். சித்தூர் மாவட்டம், தவனம்பள்ளி மண்டலம், பட்டினம் கிராம பகுதியில் தவனம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில், கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து, காரை ஓட்டி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில் தவனம்பள்ளி மண்டலம், பட்டினம் கிராஸ் கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(44) என்பது தெரிந்தது. தொடர்ந்து, லோகநாதனை கைது செய்த போலீசார் காருடன் 1,536 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹2 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட லோகநாதன் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் மதுபாட்டில்கள் கடத்தியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.