ஆலங்குடி : ஆலங்குடி அருகேயுள்ள வாணக்கன்காட்டில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை அகற்ற அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வாணக்கன்காடு, வடகாடு கள்ளிக் கொல்லை ஆகிய பகுதிகளில் கடந்த 1994ம் ஆண்டு மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் இருக்கிறதா? என ஆய்வு செய்வதற்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தால் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு பிப்.16ம் தேதி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்த பிப்.16ம் தேதி முதல் 174 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 2017ம் ஆண்டுமுதல் நடைபெறும் ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றினர்.இதனைத் தொடர்ந்து, வாணக்கன்காட்டில் ஓ.என்.ஜி.சியால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றை அகற்றி, அந்த இடத்தை விவசாயிகளுக்கே மீண்டும் ஒப்படைப்பதற்காக, ஓஎன்ஜிசி, ஆழ்குழாய் கிணறு பொதுமேலாளர் சந்தானக்குமார் தலைமையிலான முதுநிலை பொறியாளர் அழகு மணவாளன், முதுநிலை தொழிநுட்ப வல்லுநர் ராதாகிருஷ்ணன், முதுநிலை புவியியலாளர் அருண்குமார், ஓஎன்ஜிசி தாசில்தார் சந்திரசேகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.