சென்னை: திராவிடர் கழக மேனாள் செயலவை தலைவர் ராசகிரி கோ.தங்கராசு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தியில்
திராவிடர் கழகத்தின் மேனாள் செயலவைத் தலைவரும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நிர்வாகக் குழுவின் துணைத்தலைவருமான பெரியாரியப் பெருந்தொண்டர் அய்யா ராசகிரி கோ. தங்கராசு அவர்கள் நேற்று இரவு மறைந்தார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன்.
அய்யா தங்கராசு அவர்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலந்தொட்டு தற்போதுவரை திராவிடர் கழகத்தின் முக்கியத் தூண்களுள் ஒருவராக விளங்கியவர். சட்ட எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைசென்ற கொள்கைக் குன்றாகத் திகழ்ந்தவர்.
பெருவாழ்வு வாழ்ந்து பெரியாரியத் தொண்டாற்றிய அவர் மூப்பின் காரணமாக நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார்.
திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களுள் ஒருவரான அய்யா ராசகிரி கோ. தங்கராசு அவர்களை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினர் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.