×

பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவு வெளியீட்டு விவகாரத்தில் முறைகேடு: முன்னாள் துணைவேந்தர், தேர்வு அலுவலர் மீது விஜிலென்ஸ் வழக்கு

சேலம்: சேலம் கருப்பூரில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில், கடந்த 2012-2015ம் காலகட்டத்தில் பதிவாளராக இருந்த அங்கமுத்து, கடந்த 2017ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி விஜயலட்சுமி.  பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவை வெளியிடும் பணியை தனியாருக்கு வழங்கியதில்  முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையில் விஜயலட்சுமி புகார் அளித்தார். இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடந்த 2015 முதல் 2019 வரை, பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியீட்டு நடவடிக்கைகள், தனியார் நிறுவனத்தின் வசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு விடைத்தாளுக்கு ரூ.3 முதல் ரூ.5.25 வரை கணக்கிட்டு, நிதிக்குழு ஒப்புதல் பெறாமல் ரூ.3.26 ேகாடி வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையிலேயே, அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் உள்ளது. ஆனால், அந்த பணியை தனியார் வசம் முறைகேடாக வழங்கி நிதியிழப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதில், அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் லீலா மற்றும் பதிவாளர் அங்கமுத்து ஆகியோர் ஆதாயம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல், உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத 5 கல்லூரிகளுக்கு, பல்கலைக்கழக இணைவு அனுமதி முறைகேடாக வழங்கப்பட்டள்ளது.

மேலும், எந்தவித வசதியும் இல்லாத 3 கல்லூரிகளுக்கு, விதிகளை மீறி புதிய பாடப்பிரிவுகள் நடத்த அனுமதி வழங்கிய குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, துணைவேந்தர் சுவாமிநாதன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் லீலா மற்றும் பதிவாளர் அங்கமுத்து ஆகியோர் மீது, மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரியார் பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.


Tags : Periyar ,University , Periyar University, Examination, Abuse, Former Vice-Chancellor, Examination Officer
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்...