திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை கொடி ஏற்றத்துடன் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறுவதையொட்டி நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வீதி உலா வருவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்குள் உள்ள கல்யாண மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது. அதன்படி, பிரமோற்சவத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகன சேவைகளில் கல்யாண மண்டபத்தில் உற்சவர்கள் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.
இந்நிலையில், பிரமோற்சவத்தையொட்டி ஆகம விதிகள்படி நேற்று காலை 6 மணி முதல் கோயிலில் பல்வேறு வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வார் திருமஞ்சன சேவை நடத்தப்பட்டது. இதில், பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம், குங்குமம் பூ உள்ளிட்ட பொருட்களை கலந்து மூலவர் சன்னதி உட்பட கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து துணை சன்னதிகள், கொடி கம்பம், பலிபீடம், விமான கோபுரம் என அனைத்து இடங்களிலும் சுத்தப்படுத்தப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து, காலை 11.30 மணிக்கு மேல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.