சென்னை: தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சாய் (25). பழைய துணிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தெலங்கானாவில் இருந்து நண்பர்களுடன் பழைய துணிகளை வாங்க சென்னைக்கு வந்துள்ளார். நேற்று காலை மெரினா கடற்கரைக்கு வந்த சாய், எழிலகம் எதிரே உள்ள கடலில் தடையை மீறி நண்பர்களுடன் குளித்துள்ளார். அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் சாய் சிக்கி மாயமானார். தகவலறிந்து வந்த அண்ணா சதுக்கம் போலீசார், மாயமான சாயை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் மாயமான சாய் உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. இதேபோல், புளியந்தோப்பு கோவிந்த் சிங் தெருவை சேர்ந்த ஐடிஐ மாணவன் சரவணன் (22) நேற்று முன்தினம் நண்பர்கள் 6 பேருடன் மெரினா கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமானார். அவரை, போலீசார் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, நேற்று காலை அண்ணாசதுக்கம் பின்புறம் சரவணன் உடல் கரை ஒதுங்கியது. போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.