×

திருவலம் அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி கணவருடன் கர்ப்பிணி பலி

திருவலம்: திருவலம் அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி கணவருடன், கர்ப்பிணி மனைவியும் பரிதாபமாக இறந்தார். வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த உள்ளிபுதூர் கிராமம் டேங்க் ெதருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(34). இவர் பொம்மசமுத்திரம் பகுதியில் உள்ள மாட்டு தீவனம் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.  இவரது மனைவி அஸ்வினி(25). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. தற்போது அஸ்வினி ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஜெயபிரகாஷ் வேலைக்கு செல்வதற்கு முன், தான் வளர்த்து வரும் பசுமாடுகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள விவசாய நிலத்தில் கட்டி வைப்பாராம். பின்னர் மாலை வீடு திரும்பியதும் மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவது வழக்கம். அதேபோல் நேற்று ஜெயபிரகாஷ் மாடுகளை மேய்ச்சலுக்கு கட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வர காலதாமதம் ஆகியுள்ளது. இதனால் இரவு 8.30 மணியளவில் ஜெயபிரகாஷ், அஸ்வினி இருவரும் மாடுகளை ஓட்டி வர விவசாய நிலத்திற்கு சென்றனர். ஆனால் இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை அதே கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாய நிலம் வழியாக சென்றனர். அப்போது ஜெயபிரகாஷ் அஸ்வினி இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகில் ஒரு பசுமாடும் இறந்து கிடந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் திருவலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜெயபிரகாஷ், அஸ்வினி ஆகியோரது கால்களிலும், பசுமாட்டின் உடலிலும் மின்சாரம் தாக்கியதற்கான அடையாளம் இருந்தது. அருகில் உள்ள விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலி இருந்தது. எனவே ஜெயபிரகாஷ், அஸ்வினி மற்றும் பசுமாடு மின்வேலியில் சிக்கி இறந்தது தெரிய வந்தது.   இதையடுத்து போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பசுமாட்டின் உடல் வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஜெயபிரகாஷின் உறவினர் மகாராஜன் திருவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வன் வழக்கு பதிவு செய்து மின்வேலி அமைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மின்வேலியில் சிக்கி கணவருடன், கர்ப்பிணி பலியான சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tiruvalam , Electrical fence
× RELATED வில்வநாதீஸ்வரர் கோயில் பிரமோற்சவ...