ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 4 திருமணத்தை மறைத்து 5வதாக திருமணம் செய்து கொள்ள தயாரான காவலர் மீது 4வது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காலவராக பணிபுரிந்து வருபவர் அப்பள ராஜு. இவர் 4 பெண்களை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். ஒருவருக்கொருவர் தெரியாமலும் சந்தேகம் வராத வகையிலும் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், 4வதாக திருமணம் செய்த பத்மா கர்ப்பமான நிலையில் அவரது கருவை கட்டாயப்படுத்தி கலைத்துள்ளார். இதே போல் 4 முறை கர்ப்பத்தை கலைத்ததால் சந்தேகம் அடைந்த பத்மா, விசாரித்துள்ளார். அப்போது தான் அப்பள ராஜுவுக்கு ஏற்கனவே 3 திருமணம் ஆகி 5 பிள்ளைகள் இருப்பது தெரியவந்தது. 4வதாக தன்னை திருமணம் செய்ததை அறிந்து பத்மா அதிர்ச்சி அடைந்துள்ளார்.அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அப்பள ராஜு அவருடன் பணிபுரியும் சக காவலர் ஒருவரை 5வதாக திருமணம் செய்ய தயாரான தகவல் கிடைத்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பத்மா, கணவர் மீது திஷா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளதாகவும் அப்பள ராஜூவை காவலர் பணியில் இருந்து நீக்கி கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.