சென்னை : தமிழ்நாட்டில் போராடுவதற்கு எந்த காரணமும் இல்லாததால் திமுக அரசின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வேண்டும் என பாஜகவினர் போராட்டம் நடத்துவதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார். ராமலிங்க அடிகளாரின் 199வது அவதார தினத்தை முன்னிட்டு சென்னை ஏழு கிணற்றில் வள்ளலார் வாழ்ந்த இடத்தில் அவரது படத்திற்கு ஐந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்னைத் தமிழில் வழிபாடு நடத்தும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றும் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படியே கோவில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் கூறினார். இந்த நிலையில் வார இறுதி நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம் நடத்துவது தேவையற்றது என்றும் அவர் கூறினார். வள்ளலாரின் அரும்பணிகளை பெருமைப்படுத்தும் விதமாக விரைவில் டெண்டர் கோரப்பட்டு 72 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். மேலும் சென்னை ஏழு கிணற்றில் ராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீடு, அரசு சார்பில் புனரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.