×

கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டையில் இடி தாக்கி மீனவர் உயிரிழப்பு!: 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பு..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டையில் இடி தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் காலை முதல் கடலூர், ரெட்டிச்சாவடி, நெல்லிக்குப்பம், ஆலப்பாக்கம், பெரியப்பட்டு, பண்ருட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் கடலூர் சாமியார்பேட்டை கடற்கரையில் இன்று காலை வழக்கம் போல் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிய சுமார் 10 மீனவர்கள், படகில் இருந்து மீன்களை இறக்கி வைத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இடி தாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் 9 மீனவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சாமியார்பேட்டை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மழைக்காலத்தில் இடி குறித்தான விழிப்புணர்வு மீனவர்களுக்கு இல்லாமையே இந்த சம்பவம் அரங்கேறியதற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே மழைக்காலத்தில் இடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Cuddalore ,Samiyarpettai district , Cuddalore, Thunder, Fisherman killed
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்