மஞ்சூர் : கீழ்குந்தா, பிக்கட்டி, கோத்தகிரி, கேத்தி பேரூராட்சி பகுதிகளில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மூன்றாவது கட்டமாக 292 இடங்களில் மற்றும் 20 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 312 முகாம்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் மஞ்சூர் அங்கன்வாடி மையம், முள்ளிமலை அரசு உயர் நிலைப்பள்ளி, ஓணிகண்டி துணை சுகாதார நிலையம், குந்தாபாலம் சமுதாயகூடம் ஆகிய இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது.
கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் தடுப்பூசி முகாம்களில் தேவையான ஏற்பாடுகளை பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர். இதேபோல் பிக்கட்டி பேரூராட்சி சார்பில் பிக்கட்டி, தும்பனேரிகொம்பை, எடக்காடு ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. பிக்கட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயந்த் மோசஸ் முகாம்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். கேத்தி பேரூராட்சிகுட்பட்ட 10கும் மேற்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் தலைமையில் ஊழியர்கள் முகாம்களுக்கு சென்று தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.
இதேபோல் கோத்தகிரி பேரூராட்சிகுட்பட்ட கோயில்மேடு, ராம்சந்த், தாளவாய், காம்பாய்கடை, ஒரசோலை, காமராஜ்நகர், தாந்தநாடு உள்பட பல்வேறு கிராமங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் முகாம்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த முகாம்களின் மூலம் முதல் மற்றும் இரண்டாம் தவணை மற்றும் 18 வயது நிரம்பியவர்கள், வியாபாரிகள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள்.