திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செல்போனில் மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல் விடுத்த ஜிம் பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (21), உடற்பயிற்சி கூட பயிற்சியாளர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய 10ம் வகுப்பு பயிலும் மாணவியை தனது செல்போனில் ஆபாச படம் எடுத்து அதை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லில்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில்,காதலிப்பதாக கூறி மாணவி ஆன்லைன் வகுப்பு கற்க வாங்கிய செல்போனில் அரவிந்தன் ஆபாச படங்களை எடுத்து காண்பித்து மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.