×

திருவாரூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு தீயணைப்புத்துறை ஆபீசில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.1.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர். திருவாரூர் நேதாஜி சாலையில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு மாவட்ட தீயணைப்பு அலுவலராக வடிவேல், உதவி அலுவலராக தஞ்சையை சேர்ந்த முருகேசன்(56) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள், வணிக நிறுவனங்களுக்கு தீத்தடுப்பு சான்றிதழ் வழங்கவும், தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகள் அமைக்க தடையில்லா சான்று வழங்கவும் உதவி அலுவலர் முருகேசன் அதிக அளவு லஞ்சம் கேட்பதாக திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று மாலை 6.30 மணியளவில் போலீசார் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் அலுவலகத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு 8.30மணி வரை நடந்தது. அப்போது மாவட்ட உதவி அலுவலர் முருகேசனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையால் திருவாரூர் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Thiruvarur fire department , Anti-corruption police raid fire department seizes Rs 1.20 lakh in Thiruvarur
× RELATED திருவாரூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்...