திருச்சி: தமிழகத்தில் முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 62 சதவீதம் பேர் என்று மக்கள் நல்வாழ்த்துறை துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.திருச்சியில் நேற்றிரவு அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் 4ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 20ஆயிரம் முகாம்கள் என்ற இலக்கை கடந்து 24,882 முகாம்களில் நடத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர், 2ம் கட்ட தடுப்பூசி முகாமில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர், 3ம் கட்ட முகாமில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர், 4ம் கட்ட தடுப்பூசி முகாமில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் அலுவலர்களுடன் கலந்து பேசி அடுத்த முகாம் குறித்த தகவல் அறிவிக்கப்படும்.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 62 சதவீதம் பேர்.
உதகையில் 600க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் முழுமையாக தடுப்பூசி செலுத்தபட்டிருக்கிறது. புதுக்கோட்டையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நீலகிரியை பொறுத்தவரை முதன்முதலில் ஒட்டுமொத்த பழங்குடியினருக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.