திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜகவினர் போட்டியிடும் பகுதிகளில் அதிமுகவினரும் வேட்பாளரை களமிறக்கி பரப்புரை செய்து வருவதால் குழப்பம் நிலவுகிறது. கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் பாஜக சார்பில் சத்யபிரியாவும், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு கலை சோமசுந்தரபாரதியும் போட்டியிடுகின்றனர். ஆனால் அவர்களை எதிர்த்து அதிமுக சார்பில் மாதனூர் ஒன்றியத்தில் கலாவும், ஜோலார்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சங்கீதாவும் வேட்பாளர்களாக களமிறங்கி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள பாஜகவினர், கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவினர் துரோகம் செய்து வருவதாக அவர்கள் தங்கள் தலைமைக்கு புகார் தெரிவித்துள்ளனர். மேலும், பிரச்சார சுவரொட்டிகளிலும் தங்கள் தலைவர்களின் படங்களை போடாமல் அதிமுகவினர் அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டிய பாஜகவினர், அவர்களின் துரோக நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் வீரமணியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். ஒரே கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரம் செய்து வருவதால் கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.