×

அரியலூர் மாவட்டத்தில் வயல்களில் பாசி படராமல் தடுக்க தொழில் நுட்பங்கள்: வேளாண் இணை இயக்குனர் விளக்கம்

தா.பழூர்: அரியலூர் மாவட்டத்தில் வயல்களில் பாசி படராமல் தடுக்க தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் இணை இயக்குனர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 24 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது அரியலூர் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கான சம்பா நெல் சாகுபடி செப்டம்பர் மாதம் தொடங்கி நாற்றங்கால் விதைப்பு முதல் நடவு பணிகள் வரை நடைபெற்று வருகிறது. தற்போது நெல் விவசாயிகளுக்கு மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவில் நெல்வயல்களில் பாசி படர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் நாற்றங்கால்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

இதனை மேலாண்மை செய்ய அரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பழனிச்சாமி, கிரீடு வேளாண் அறிவியல் மையம் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுக்கண்ணன் மற்றும் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் ஆகியோர் இணைந்து விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பம் மேலாண்மை முறைகளை வெளியிட்டுள்ளனர். களர் மற்றும் உவர் நிலங்களில் அவசியம் மண் மற்றும் நீரை பரிசோதனை செய்து மண்ணை சீர்திருத்தம் செய்து கார அமிலத்தன்மையை நடுநிலையாக்கல் வேண்டும். அதன்படி விவசாயிகள் உவர் மற்றும் களர் தன்மையை தாங்கி வளரும் நெல் ரகங்களான திருச்சி 1, திருச்சி 3, திருச்சி 4 மற்றும் கோ 43 போன்றவற்றை தேர்வு செய்து பயிர் செய்யவும். நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் அடியுரமாக பாஸ்பேட் உரங்களான டிஏபி, கலப்பு உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் அதிகம் பயன்படுத்தப்பட்டால் பாசி மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாகி நாற்றுக்கள் கருகிவிடும் நிலை ஏற்படுவதால் பாஸ்பேட் உரங்களின் பயன்பாட்டை குறைத்து அதற்கு பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் ஏக்கருக்கு ஒரு கிலோ இடுதல் அவசியமாகும்.

நாற்றங்கால் மற்றும் வயல்களில் அதிகபடியான நீர் தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் வயல் நீர் குழாய் அமைத்து நீரை சிக்கனமாக கடைபிடித்தல் அவசியமாகும். பாசி அதிகம் படர்ந்துள்ள வயல்களில் கோனோவீடர், ரோட்டரி வீடர் மற்றும் பவர் வீடர் போன்ற களை எடுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி களையுடன் நிலத்தில் மடக்கி உழ வேண்டும். உப்பு நிறைந்த ஆழ் குழாய் தண்ணீரை பயன்படுத்தும் பொழுது வயல்களில் குட்டை அமைத்து நீரைத் தேக்கி வைத்து பின்னர் நாற்றங்கள் மற்றும் வயல் பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பங்களை விவசாயிகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags : Arrialur district , Techniques to prevent algae infestation in fields in Ariyalur district: Description of Associate Director of Agriculture
× RELATED அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே...