பியாங்யாங் : வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடத்தியதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வட கொரியா அரசு 30 நாட்களில் அடுத்தடுத்து 4 ஏவுகணைகளை சோதித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து கவலை தெரிவித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளுக்கு தடை விதிக்கும் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த வடகொரியாவிற்கு அழைப்பு விடுத்து இருந்தது.
இதனிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் மேற்கொள்ளும் ஆயுத சோதனைகளை ஐ.நா. ஏன் கருத்தில் கொள்வதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள வடகொரியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரட்டை கையாளும் தரநிலை கொண்டது என்பது இதன்மூலம் தெரியவந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் செயல்பட வேண்டும் என்றும் வடகொரியா மறைமுகமாக எச்சரித்துள்ளது.