மஸ்கட்: ஓமனில் மையம் கொண்ட ஷாஹீன் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. பலத்த மழையால் மஸ்கன் உள்ளிட்ட ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் ஷாஹீன் புயல் நேற்று காலை மையம் கொண்டிருந்தது. புயல் கரையை கடந்த போது பலத்த மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடிய இடமின்றி குளம் போல தேங்கியது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது.
குடியிருப்பு பகுதிகள், கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதுகாப்பான பகுதிகளில் 2,700 பேர் தங்கவைக்கப்பட்டனர். மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மஸ்கட்டில் ருசேல் தொழிற்பேட்டை பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த வீட்டில் இருந்த 2 ஆசிய தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.