×

கொரோனா இறப்பில் 90% பேர் தடுப்பூசி போடாதவர்கள் டெல்டா தவிர புதிய வகை கொரோனா இதுவரை கண்டறியப்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழகம்  முழுவதும் 4-ம் கட்ட கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று காலை 7  மணிக்கு தொடங்கிய நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை வளாகத்தில் தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அப்போது மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, ஓமந்தூரார்  பன்நோக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி மற்றும்  உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.  பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:  மூன்று கட்ட சிறப்பு முகாம்கள் நல்ல வெற்றியை தந்துள்ளது. நேற்று 24,760  மையங்களில்  பணி நடைபெறுகிறது.

1600 இடங்களில்  சென்னையில் தடுப்பூசி முகாம்  நடைபெறுகிறது. அரசு சார்பில் 4.54 கோடி தடுப்பூசி இதுவரை  செலுத்தப்பட்டுள்ளது நேற்று முன்தினம் இரவு வரை 4.79 கோடி வரை தமிழகத்தில் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது. 33.5 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. மேற்கு  மாவட்டங்களில்  தொற்று குறைவதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது. இரு தவணை  தடுப்பூசி போட்டவர்களில் 3.5 விழுக்காடு இறப்பு தான் பதிவாகியுள்ளது. முதல்  தவணை மட்டும் செலுத்தியவர்களில் 7.4 சதவீதம் வரை இறப்பு பதிவாகியுள்ளது.  42 விழுக்காடு முதியோர்களே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 22  லட்சம் பேர் முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்தும் தகுதியுடன்  உள்ளனர்.

ஒரு காலத்தில் 3.11 லட்சமாக இருந்த சிகிச்சையில்  இருப்போர் எண்ணிக்கை தற்போது 17 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  தமிழகத்தில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் இதுவரை மேற்கொண்ட ஆய்வில்  டெல்டா வகை கொரோனா வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. வீடு தேடி   சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது  கொரோனாவுடன் டெங்கு பாதிப்பும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய  விஷயமாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பல  இடங்களில் தண்ணீரை மூடி வைக்காத நிலை தற்போதும் இருக்கிறது. இதன் மூலம்  ஏடிஸ் கொசு பரவக்கூடும்.

மேலும் நாள்தோறும் 20 வரை டெங்கு  பாதிப்பு எண்ணிக்கை பதிவாகிறது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 2,410 ஆக  டெங்கு பாதிப்பு இருந்தது. தற்போது வரை இந்த ஆண்டில் 2,919 பேருக்கு டெங்கு  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 2 டெங்கு  மரணம் மட்டுமே  பதிவாகியுள்ளது என்றார் அவர்.

Tags : Delta ,Health Secretary ,Radhakrishnan , Corona, Vaccine, Delta, Health Secretary, Radhakrishnan
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு