சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் முதல்வரால் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் துவங்கப்பட்டு நேற்று வரை உயர் ரத்த அழுத்த நோய் உள்ள 6,15,153 பேருக்கும், நீரிழிவு நோய் உள்ள 4,27,728 பேருக்கும், உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் உள்ள 2,99,533 பேருக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.
மேலும் 47,685 பேர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும் 76,293 பேருக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதை தவிர்த்து 248 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தினால் நேற்று முன்தினம் வரை மொத்தம் 14 லட்சத்து 66 ஆயிரத்து 666 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.