சென்னை: காவிரி ஆணையம் உத்தரவிட்டும் தண்ணீர் தராமல் கர்நாடக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. தற்போது வரை 31 டிஎம்சி வரை தமிழகத்துக்கு பாக்கி வைத்துள்ளது. இந்நிலையில் அக்டோபரில் 39 டிஎம்சி நீர் முழுமையாக தமிழகத்துக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்துக்கு இந்த தவணை காலத்தில், 31.6 டிஎம்சி கர்நாடக அரசு பாக்கி வைத்துள்ளது. இந்த நீரை தர வேண்டும் என்று கடந்த 28ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது, காவிரி மேலாண்மை ஆணைய தலைவரும் நிலுவை தண்ணீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது வரை நிலுவை தொகையை தர நடவடிக்கை எடுக்கவில்லை கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 69 சதவீதம், கபினி அணையில் 86 சதவீதம், ஹாரங்கி அணையில் 93 சதவீதம் ஹேமாவதி அணையில் 80 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இந்த அணைகளுக்கு நீர்வரத்து வந்தால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இல்லையெனில், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்படுகிறது. அவர்கள் அணைகளில் 95 சதவீதம் மேல் இருந்தால் மட்டுமே தண்ணீர் தர முடிவு செய்துள்ளது. இதனால், தமிழகத்துக்கு குறைவாகவே தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அக்டோபரில் 39 டிஎம்சி தமிழகத்துக்கு தர வேண்டியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு தண்ணீரை விடுவிக்க மறுக்கிறது.